×

எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதியை விட மிக நிதானமாக செயல்படக்கூடியவர் முக ஸ்டாலின் - அமைச்சர் ராஜகண்ணப்பன் 

 

பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழா மற்றும் பரமக்குடி சுகாதார மாவட்டத்தின் 30 ஆம் ஆண்டு விழா ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்றது. 

இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் முருகேசன், கருமாணிக்கம்,மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பொது சுகாதார துறையின் சாதனையை விளக்கும் வகையில் நூற்றாண்டு மலரை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டார். கொரோனா பேரிடர் காலத்தில் திறம்பட செயல் புரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பதக்கம் மற்றும் பரமக்குடி சுகாதார மாவட்டத்தில் மருத்துவத் துறையில் ஆராய்ச்சியில் ஈடுபடும் இளம் மருத்துவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

அப்போது பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், “அமைச்சர் என்பவர் முதலமைச்சரின் சொல்லுக்கு கட்டுப்பட்டவர். அமைச்சர்கள், அதிகாரிகள், மக்கள் என அனைவரையும் அரவணைத்துக் கொண்டு செல்வது இந்த ஆட்சிக்கு உள்ளது. அனைவரையும் அரவணைத்து மக்களுக்கு சேவை செய்வதுதான் முதல் குறிக்கோள் என்பது அரசின் நோக்கம், முதலமைச்சர் நோக்கம். தமிழக முதல்வர் எப்போதும் நிதானமாக செயல்படுவார். நான் ஜெயலலிதா, எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி ஆகியோரை முதலமைச்சராக பார்த்து உள்ளேன் நான் பார்த்த முதலமைச்சர்களில் மிகவும் நிதானமாக செயல்பட கூடியவர் தமிழக முதலமைச்சர்” என பேசினார்.