×

சென்னை பல்கலைக்கழக வினாத்தாள் குளறுபடி - விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் பேட்டி

 

சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த வினாத்தாள் குளறுபடி குறித்து உரிய விசாரனை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். 

 சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட இணைப்பு கல்லூரிகள், உறுப்பு கல்லூரிகளில் இன்று இரண்டாம் ஆண்டிற்குரிய மூன்றாவது செமஸ்டர் தமிழ் பாடத் தேர்வு நடைபெற்றது.  இதில் 3வது செமஸ்டர் தேர்வு தமிழ் வினாத்தாளுக்கு பதிலாக கடந்தாண்டு நடைபெற்ற 4வது செமஸ்டர் தமிழ் வினாத்தாள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாம் ஆண்டு நான்காவது செமஸ்டர் தேர்வுக்குறிய கேள்வித்தாளை தேர்வுக்கு கொடுத்ததால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.  இதனால் தேர்வில் குளறுபடி ஏற்பட்ட நிலையில், தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  

இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய அவர், சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த வினாத்தாள் குளறுபடி குறித்து உரிய விசாரனை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தேர்வு உரிய முறையில் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், உதவி பேராசிரியர்கள் நியமனம் முறையாக நடைபெறுவதை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என்றும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு கட்டண அபராதம் குறைக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.