×

அத்திக்கடவு அவினாசி திட்டம் எப்போது நிறைவடையும்? அமைச்சர் பதில்

 

அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கான பணிகள் நடப்பு மாதத்திலேயே நிறைவு பெறும் என வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட அத்திக்கடவு அவினாசி திட்டம் நிறைவடையும் தருவாயில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டதாக கூறினார். அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், வறண்ட ஏரிகளில் நீர் நிரப்பியிருக்கலாம் எனவும் அவர் பேசினார்.

அதற்கு பதிலளித்து பேசிய வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, அதிமுக ஆட்சிக்காலத்தின் போது திட்டம் குறித்து விவசாயிகளுக்கு முறையாக விளக்கப்படவில்லை எனவும், தற்போது வீடு வீடாக சென்று திட்டம் குறித்து விளக்கி வருவதாகவும் பேசினார். விவசாயிகளின் ஒத்துழைப்புடன் நடைபெற்றுவந்த பணி மழை காரணமாக தாமதமானதாவும், அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கான முழு பணிகளும் நடப்பு மாதத்திலேயே  நிறைவு பெறும் எனவும் அமைச்சர் முத்துசாமி பதிலளித்தார்.

அத்திக்கடவு-அவினாசித் திட்டத்தை நிறைவேற்றுவதில் திமுக உறுதியாக உள்ளது என்று 21-06-2021 அன்று வாசிக்கப்பட்ட ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 2022-203 ஆம் ஆண்டிற்கான நீர்வளத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் 94 விழுக்காடு பணிகள் முடிவுற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் இந்தாண்டு ஆளுநர் உரையில் அத்திக்கடவு-அவினாசித் திட்டம் முடிவடையும் தருவாயில் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.