×

கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கட்டணமில்லை

 

மதுரை கப்பலூர் சுங்க சாவடியில் திருமங்கலம் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்க சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திய நிலையில் இன்று உள்ளூர் வியாபாரிகள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து கப்பலூர் சுங்க சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி கூறுகையில் "கப்பலூர் சுங்க சாவடியில் பழைய நடைமுறையே தொடரும், கடந்த 10 ஆண்டுகளாக உள்ளூர் மக்கள் எப்படி சென்று வந்துள்ளார்கலோ அதே நடைமுறையை பின்பற்ற வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது, கப்பலுர் சுங்க சாவடியில் இனி உள்ளூர் மக்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது, உள்ளூர் மக்களை கட்டணமின்றி அனுமதிக்க வேண்டும் எனும் எங்களுடைய கோரிக்கையை தேசிய நெடுஞ்சாலை துறை ஏற்றுக்கொண்டது" என கூறினார்