×

அனைத்து ஏரிகளையும் தூர்வாருவதற்கு RRR என்ற புதிய திட்டம் - அமைச்சர் துரைமுருகன்

 

தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் தூர் வாருவதற்கு RRR என்று ஒரு திட்டம் இருப்பதாகவும், அதனை செயல்படுத்த உள்ளதாகவும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
 
சென்னை கோட்டூர்புரத்தில்  மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் பயன்படும் வகையில் உணர்வுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது, அதனை கடந்த 12 ம் தேதி காணொலி மூலமாக முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்நிலையில் இன்றைய தினம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது: ஒரு சாதாரண இடத்தை அற்புதமான பூங்காவாக மாற்றியுள்ளனர். சாதாரண பூங்காவாக இல்லாமல் உணர்வு பூங்காவாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் இந்த பூங்காவை அமைத்துள்ளனர்.

ஆட்சிக்கு வந்து ஓராண்டில் பாதி நாள் கொரோனா, வெள்ளம் என இதிலே சென்றுவிட்டதால் தற்போது அத்தியாவசிய பணிகளில் கவனம் செலுத்தபட்டு வருகிறது.திமுக ஓராண்டு ஆட்சியை, அதிமுக புகழவா செய்வார்கள். எதிர்க்கட்சி என்பதால் அவர்கள் விமர்சனம் தான் செய்வார்கள். அதிமுக ஆட்சியில் குடிமராமத்து பணிகள் நடைபெற்றதா என்ற கேள்வி இருக்கிறது என்று பேசிய துரைமுருகன், தொடர்ந்து திமுக அந்த பணிகளை செய்து வருகிறது. அதுமட்டுமின்றி எல்லா ஏரிகளையும் தூர் வாருவதற்கு என "டிரிப்பில் ஆர்" என்று ஒரு திட்டம் இருப்பதாகவும், அதனை செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டார். அதேபோல் 5 ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகள் கட்டப்படும் என்று ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இந்த ஆண்டு 120 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.