×

மதுரை சிறுமி கடத்தல் வழக்கு.., காதலன் மற்றும் அவரது தாய் உள்பட 7 பேர் கைது..

 


மதுரையில் சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்பட்ட  வழக்கில்,  காதலனும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தாய் உள்பட மேலும் 7  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம், மதுரை  மேலூர் பகுதியைச் சேர்ந்த  17வயது சிறுமி காணாமல் போனதாக காவல் நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டது.  இதனையடுத்து  காவல்துறையினர் மூன்று தனிப்படைகள் வைத்து தேடி வந்தனர்.  விசாரணையில் அதே பகுதியில் வசித்து வரும் நகூர் ஹனிபா என்பவரை சிறுமி காதலித்து வந்ததாகவும் அவருடன் சென்றிருக்கலாம் என்பதும் தெரியவந்தது.  

இதனையடுத்து மேற்படி விசாரணையை தொடர்ந்ததில்,  நாகூர் ஹனிபா தான்  சிறுமியை முதலில் மதுரையில் இருந்த நண்பர் வீட்டுக்கும், ஈரோட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு  அழைத்துச் சென்றதும் உறுதியானது.  காவல்துறை விசாரணையை துரிதப்படுத்தியதை அடுத்து, நாகூர் ஹனிபாவை    தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரது தயார் எச்சரித்துள்ளார்.  இதனால் பிரச்னை ஏற்படுமோ என அஞ்சி, நாகூர் ஹனிபாவும், சிறுமியும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து  எலி மருந்து உட்கொண்டதாகக் கூறப்படுகிறது.  ஆனால் நாகூர் ஹனிபா மருந்தை சாப்பிட்டவுடன் அதை துப்பிவிட்டதாகவும், சிறுமி சிறிதளவு எலி மருந்தை உட்கொண்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து  எலி மருந்து சாப்பிட்டதைக் கூறாமல், சிறுமியை  நாகூர் அனிபா தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்ததால், நாகூர் ஹனிபாவின் தாயார் மதினா பேகம்  சிறுமியை அவரது  தயாரிடம் அழைத்துச் சென்று  ஒப்படைத்துவிட்டுச் சென்றுள்ளார்.   சிறுமியை  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.  அங்கு அவருக்கு தற்போது  உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிறுமி  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பதையும்  காவல் துறை உறுதி படுத்தியுள்ளது.

இதனையடுத்து சிறுமி காணாமல் போன வழக்கை,  போக்சோ வழக்காக மாற்றிய போலீஸார்  நாகூர் ஹனிபாவை  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும்  அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் மதினா பேகம் நண்பர், உறவினர்  உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் இரண்டு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.