×

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீது தொடரப்பட்ட நில அபகரிப்பு வழக்குகள் ரத்து

 

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீது தொடரப்பட்ட நில அபகரிப்பு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை குரோம்பேட்டையில் குரோம் லெதர் தொழிற்சாலைக்கு சொந்தமாக இருந்த நிலங்கள், 1982-ம் ஆண்டில் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தின்கீழ் அரசுடைமையாக்கப்பட்டன. அந்த நிலங்களை நீராதாரங்களுக்கு பயன்படுத்தும் வகையில் 1984-ம்ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிலையில், 1996-ம் ஆண்டில் குரோம் தோல் தொழிற்சாலை தலைவராக இருந்த, தற்போதைய திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன், 1.55 ஏக்கர் நிலத்தை, நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தின் விதிகளை மீறி, 41 பயனாளிகளுக்கு பிரித்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது. நீராதாரங்களுக்கு பயன்படும் வகையில் ஒதுக்கப்பட்ட நிலத்தை, தனி நபர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டதாக ஜெகத்ரட்சகன் மீது புகார் எழுந்தது. இது  தொடர்பாக குவிட்டன்தாசன் என்பவரின் புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் ,நில அபகரிப்பு,போலி ஆவணங்கள் தயாரித்தது என இரண்டு வழக்குகளை பதிவு செய்தனர். 

இந்த வழக்குகளை ரத்து செய்யக்  கோரியும், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும் ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி இளந்திரையன் முன்பு நடைபெற்றது.மனுதாரர்  தரப்பில் 1965-ல் மோசடி நடந்ததாகக் கூறப்பட்டு முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், 1995-ஆம் வருடம் பங்குகளை வாங்கிய ஜெகத்ரட்சகன் மீது எவ்வாறு குற்றச்சாட்டு கூற முடியாது என்றும் குறிப்பிட்டனர். ஏற்கனவே இது தொடர்பாக வழங்கப்பட்ட புகார் முகாந்திரம் இல்லை என்று காவல்துறை முடித்து வைத்ததாகவும், மனுதாரருக்கும் இந்த சொத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் வாதிட்டனர்.

புகாரில் எந்த உண்மைத்தன்மையும் கிடையாது என்றும் இது தொடர்பாக ஏற்கனவே தொடரப்பட்ட சிவில் வழக்குகள் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி இளந்திரையன், இரு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.