×

மரியாதையா பதவிய ராஜினாமா செய்துவிட்டு அரசியல் பேசுங்க! ஆளுநருக்கு கொளத்தூர் மணி எச்சரிக்கை

 

அரசியல் பேச வேண்டும் என்றால் ஆளுநர் பதவி விலகி விட்டு கமலாலயத்தில் உட்கார்ந்து அரசியல் பேச வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தனியார் திருமண மண்டபத்தில் திராவிடர் விடுதலை கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தலைவர் கொளத்தூர் மணி கலந்துகொண்டு பல்வேறு விதமான ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கொளத்தூர் மணி, “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து குழப்பமான செய்திகளையே பேசி வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் சார்பில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை  தொடர்ந்து ஆளுநர்  நிராகரித்து வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் தீர்மானங்களை நிராகரிப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. மேலும் தமிழக அரசு எந்த திட்டத்தில் பின்னோக்கி உள்ளது என ஆளுநர்  உடனடியாக தெரிவிக்க வேண்டும். தற்போது வந்த ஆய்வின் கணக்கெடுப்பின்படி தமிழகம் அனைத்து துறைகளிலும் முதலிடத்தில் உள்ளது.

பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்கள் வளர்ச்சி பாதையில் பின்னோக்கி உள்ளன. ஆளுநர் தீவிர அரசியல் பேச வேண்டும் என்றால் மரியாதையாக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு கமலாலயத்தில் அமர்ந்து அரசியல் செய்ய வேண்டும். ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு அரசியல் பேசுவது கேவலமானது, கண்டிக்கத்தக்கது” என தெரிவித்தார்.