×

கோடநாடு வழக்கு : 3,600 பக்க விசாரணை அறிக்கை தாக்கல்.. 

 

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீஸ் 316 பேரிடம் நடத்திய விசாரணை தொடர்பான அறிக்கை உதகை நீதிமன்றத்தில்  ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

 கடந்த 2017 ம் ஆண்டு  ஏப்ரல் மாதம்  24ம் தேதி  கோடநாடு எஸ்டேட்டில்  கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன. இந்த  வழக்கு தொடர்பாக கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.. இதற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி உட்பட ஏராளமானோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து, பல சாட்சிகளுடன் கோவையில் உள்ள பி.ஆர்.எஸ் அலுவலகத்தில் ஐ.ஜி. சுதாகர் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி  வந்தனர்.

இதனிடையே, இவ்வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐடிக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதனால், தனிப்படை போலீசார் இதுவரை சாட்சிகள் மற்றும் குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணை தொடர்பான ஆவணங்களை ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிபதி முருகனிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து விசாரணை நடத்த ஏதுவாக ,நீலகிரி மாவட்ட காவல்துறை அதிகாரி இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களின் நகல்களையும் சி.பி.சி.ஐடி போலீசாரிடமிருந்து பெற்றுச் சென்றார்.  .

ஏ.டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் வழக்கு விசாரணையை மேற்கொண்டு வந்த நிலையில், இதுவரை  316 பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் 316 பேரிடம் பெற்ற வாக்குமூலங்கள் அடங்கிய 3, 600 பக்க விசாரணை அறிக்கையை இன்று ஒப்படைத்தனர். உதகை நீதிமன்றத்தில் 3,600 பக்க விசாரணை அறிக்கையை சி.பி.சி.ஐடி போலீஸார்  ஒப்படைத்தனர். கோடநாடு வழக்கை தொடர்பாக சசிகலாவிடம் 30 மணி நேரம்  தனிப்படை போலீஸ்  விசாரணை நடத்தியது.  விசாரணையின் போது சசிகலாவிடம் 280 கேள்விகள் கேட்கப்பட்டன;  அதற்கு  சசிகலா அளித்த பதில்கள் 30 பக்கங்களாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.