×

கொடநாடு வழக்கு- சசிகலாவிடம் 30 மணிநேரத்தில் கேட்கப்பட்ட 280 கேள்விகள்

 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிபடை போலிசார் சசிகலா உள்ளிட்ட 316 பேரிடம் நடத்திய விசாரணை குறித்த அறிக்கையை கடந்த மாதம்  நீதிமன்றத்தில் ஒப்படைத்த நிலையில், தற்போது அந்த அறிக்கை 3600 பக்கங்கள் கொண்டிருப்பதும் சசிகலாவிடம் மட்டும் 30 மணி நேரத்தில் 280 கேள்விகள் கேட்கபட்டு அவர் அளித்த பதில்களை 30 பக்கங்களில் பதிவு செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா உள்ளிட்டோருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது அப்போது இரவு காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார் இது குறித்த வழக்கை கோத்தகிரி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக கூறி ஏ டி எஸ் பி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் கொடநாடு மேலாளர் நடராஜன், ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 10 10 பேர் உள்பட 316 பேரிடம் விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில் திடீரென கடந்த செப்டம்பர் மாதம் தமிழக டிஜிபி கோடநாடு வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது. அதனை அடுத்து தனிப்படை போலீசார் விசாரணையை நிறுத்தியதுடன் இதுவரை அவர்கள் மேற்கொண்ட விசாரணை குறித்த அறிக்கையை வழக்கு விசாரணை நடைபெற்று வரும் உதவிகள் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதன் நகலை சிபிசிஐடி போலீசாருக்கும் வழங்கபட்டது. அதனை பெற்று கொண்டுள்ள சிபிசிஐடி போலிசார் விரைவில் விசாரணையை தொடங்கவிருக்கும் நிலையில் தனிபடை போலிசார் அறிக்கை குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அதில் தனிப்படை போலிசார் 316 பேரிடம் மேற்கொண்ட விசாரணையின் பெறபட்ட வாக்கு மூலங்கள் மட்டும் 3600 பக்கங்களாக பதிவு செய்து அறிக்கையாக சமர்ப்பித்து இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், கொடநாடு எஸ்டேட் பங்குதாரருமான சசிகலாவிடம் மேற்குமண்டல ஐஜி சுதாகர் தலைமையில் சென்ற தனிபடை போலிசார் 30 மணி நேரம் விசாரித்ததாகவும்  அவரிடம் 280 கேள்விகளை கேட்டதாகவும் அதற்கு அவர் அளித்த பதில்களை 30 பக்கங்களாக சமர்ப்பித்து இருப்பதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.