×

கன்னியாகுமரி தேநீர் கடை விபத்து:  முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு..

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேநீர் விடுதியில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரச்ய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் அமைந்துள்ள ஷபீக் என்பவரின் தேநீர் விடுதியில் இன்று (17.7.2022) காலை சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் தேநீர்விடுதியில் வேலைபார்த்து வந்த மூசா (வயது 48) பிரவின் (வயது 25) சேகர் (வயது 52) மற்றும் அங்கு தேநீர் அருந்த வந்த சுப்பையன் (வயது 66) சுதா (வயது 43) சந்திரன் (வயது 62) சுசீலா (வயது 50) மற்றும் ஒருவர் உட்பட 8 நபர்கள் தீக்காயம் அடைந்துள்ளனர் என்ற செய்தியினை கேட்டு வருத்தமுற்றேன்.

தீக்காயமடைந்தவர்களுக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். இத்தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் ஐம்பதாயிரம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.