எழுத்தாளர் இமையத்துக்கு கன்னட தேசிய கவி குவேம்பு விருது அறிவிப்பு..
சிறந்த எழுத்தாளர்களுக்கு கன்னட இலக்கிய அமைப்பு தேசிய அளவில் வழங்கும் குவேம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார் தேசிய விருதுக்கு, தமிழ் எழுத்தாளர் இமையம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்..
கன்னட இலக்கியத்தின் மகாகவி ஆக போற்றப்படுபவர் குவேம்பு. இவரது பெயரிலான நினைவு அறக்கட்டளை கடந்த 2013 ஆண்டு முதல், ஆண்டுதோறும் ஒவ்வொரு மொழியிலும் சிறந்து விளங்கும் எழுத்தாளர்களுக்கு ராஷ்ட்ரிய புரஸ்கார் தேசிய விருது வழங்கி கௌரவத்து வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு தமிழ் மொழிக்காக எழுத்தாளர் இமையத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசுத் தொகையாக 5 லட்சம் ரூபாயும், வெள்ளி பதக்கமும் வழங்கப்பட உள்ளது.
சாதிய கொடூரம், நடுநாட்டு மக்களின் வாழ்க்கையை அவர்களின் பண்பியலோடு எளிமையாக எழுதி வருபவர் இமையம்.. ‘கோவேறு கழுதைகள்’என்கிற புதினத்தின் மூலம் தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமான இவர், ஆறுமுகம், செடல், எங் கதெ, செல்லாத பணம், பெத்தவன் ஆகிய நாவல்களையும், மண்பாரம், வீடியோ மாரியம்மன், கொலைச்சேவல், சாவு சோறு, பெத்தவன், நறுமணம், நன்மாறன் கோட்டைக் கதை ஆகிய கதை தொகுப்புகளையும் , பல்வேறு சிறுகதை தொகுப்புகளையும் எழுதியுள்ளவர். இவரது செல்லாத பணம் புதினம் கடந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.