×

பாஜக சனாதன வெறியில் வன்முறைக்கு வித்திடுகிறது- கே.பாலகிருஷ்ணன்

 

சனாதன வெறியில் பாஜக  வன்முறைக்கு வித்திடுவதாக கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள கே.பாலகிருஷ்ணன், “திமுக எம்.பி., ஆ.ராசா பேசிய ஒரு மேடைப் பேச்சின் சிறு பகுதியை எடுத்து வைத்துக் கொண்டு,‌ வன்முறையை தூண்டும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. பாஜகவின் இந்தப் போக்கு வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும். மனு அநீதி சாஸ்திரத்திலும், சனாதன நூல்களிலும் காலம் காலமாக  இடம்பெற்றுள்ள அநாகரீகமான கருத்துக்கள் குறித்து எந்த கோபமும் கொள்ளாதவர்கள், அதை எடுத்துக்காட்டி விமர்சித்த  ஆ.ராசா மீது பாய்கிறார்கள். தாக்குதலைத் தூண்டிவிடுகிற பகிரங்க முயற்சிகளைச் செய்கிறார்கள்.

எத்தனையோ அறிஞர்களால் எடுத்துக் காட்டப்பட்டு, சாடப்பட்ட - இந்திய அரசமைப்புக்கு விரோதமான அந்த கருத்துக்களை சுட்டிக்காட்டி பலரும் கண்டித்துள்ளார்கள். ஆனால் அதையே ஆ.ராசா எடுத்துச்சொன்னால் மட்டும் எதிர்ப்பு எழுவது ஏன்?  சாதி ஆதிக்கத்தின் அடிப்படையில் எழும் அதே சனாதன வெறிதானே? இந்த சிந்தனைதான் ஆபத்தானது, அநாகரீகமானது. பாஜக முன்னெடுக்கும் இத்தகைய அரசியல் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக திமுக எம்.பி. ஆ.ராசா, சமீபத்தில் ஹிந்துக்களாக இருப்பவர்கள் விபசாரியின் மகன் என பேசியிருந்தார். இதற்கு திமுக தலைமையோ, கூட்டணி கட்சிகளோ கண்டனமோ எதிர்ப்போ தெரிவிக்காமல் மவுனம் காக்கின்றன.