×

அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும்  - கே.பாலகிருஷ்ணன் காட்டம்..

 


தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளார் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  

 திருவாரூரில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு   திராவிட மாடல் விளக்கக் கூட்டத்தில்  பங்கேற்ற  பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ பிரிட்டனை தாண்டி 5வது வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாறப்போகிறது என்று  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்தியா ஏற்றுமதி,  இறக்குமதி வர்த்தகத்தில் பின்னடைவை சந்தித்து வருகிறது. ஒரு நாடு வளர்கிறது என்றால் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும். அந்நிய செலாவணி மிச்சமாக வேண்டும். இந்தியா உலகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது என பாஜக கதை விடுவது நாட்டு மக்களை ஏமாற்றும் செயல்.

இலவசங்களை குறைக்க வேண்டும் என்கிற மத்திய அரசிக்கு எதிராக நிதியமைச்சர் பிடிஆர் கேள்வி கேட்கிறார்.  இலவசங்களை குறைத்து கார்ப்பரேட்டுகளை கொழிக்க வைக்கும் ஒன்றிய அரசு, சாதாரண மக்களுக்கு எதுவும் தரக்கூடாது என்கிறது. இதுகுறித்து கேட்டால் அண்ணாமலைக்கு கோபம் வருகிறது. அரசியல் முதிர்ச்சி இல்லாமல் தமிழக நிதியமைச்சரை விமர்சிப்பது அநாகரிகம். அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும்.  நாட்டு மக்களுக்கு இலவசங்கள் தேவைப்படுகிறது. இந்த திட்டங்கள் பறிபோனால் பட்டினி சாவு நிலை ஏற்படும். பட்டினி சாவுகளை தடுக்க இலவசங்கள் தேவையென வலியுறுத்தும் தமிழக நிதியமைச்சருக்கு எனது பாராட்டுகளை தெரிவிக்கிறேன்.

பத்தே முக்கால் லட்சம் கோடி கடன் தள்ளுபடி பண்ணும் மோடி இலவசங்கள் எதற்கு என்கிறார். அதனால் தான் உலகிலயே 3வது பணக்காரராக இந்தியர் இருக்கிறார். அதானி உலக பணக்காரராக வந்திருப்பது என்பதே மோடி அரசின் சாதனை. ரேஷன் கடையில் பிரதமர் படத்தை  வைப்பது அவசியம் அற்றது. மோடி என்பது ஒருவழி பாதை. அவர் பேசுவது மட்டுமே உலகம் கேட்க வேண்டும். மற்றவர்கள் பேசுவதை அவர் கேட்க மாட்டார்.” என்று கூறினார்.