×

 மழைநீர் வடிகால் கால்வாயில் விழுந்து பத்திரிக்கையாளர் பலி.. - டிடிவி தினகரன் இரங்கல்.. 

 

சென்னையில் மழைநீர் வடிகால்  கால்வாயில் தவறி விழுந்து இளம் பத்திரிக்கையாளர் உயிரிழந்ததற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி, தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணிபுரிந்துவந்த திரு. முத்துக்கிருஷ்ணன் அவர்கள், சென்னை மழைநீர் வடிகால் பணிகளுக்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து, அதன் தொடர்ச்சியாக மரணத்தை தழுவியிருப்பது  அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.  அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ஊடக நண்பர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்னை மாநகரில் மிகுந்த தொய்வோடு நடந்துவரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்தவும், பணிகள் முடியும்வரை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யும்படியும்  ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தும் தமிழக அரசு காட்டிய அலட்சியத்தால்  இன்று முத்துக்கிருஷ்ணனை இழந்திருக்கிறோம். இனிமேலும் உயிர்ப்பலிகள் ஏற்படாத அளவுக்கு இனியாவது தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அத்துடன் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.

மறைந்த செய்தியாளர் திரு. முத்துக்கிருஷ்ணனுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவி போதாது. அவரது வயது, குடும்ப சூழல் இவற்றை கருத்தில்கொண்டு, ஒரு தனி நேர்வாக இச்சம்பவத்தைக் கருதி, குறைந்தது ஐம்பது லட்சம் ரூபாயை அந்தக் குடும்பத்திற்கு நிவாரணமாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.