×

"திக்கு தெரியாத காட்டில் சிக்கி தவிப்பது போல் ஓ.பி.எஸ், சசிகலா, தினகரன் இருக்கிறார்கள்"

 

திக்கு தெரியாத காட்டில் சிக்கி தவிப்பது போல் ஓ.பி.எஸ், சசிகலா, தினகரன் இருக்கிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “திமுக கற்காலத்துக்கு சென்று விட்டது. திமுக அமைச்சர்கள் செய்யும் அலப்பறைகளை சொல்லி மாளாது. அதில் ஒன்றுதான் அமைச்சர் நாசர். திமுக நிர்வாகி மீது கல் வீசும் செயல். இப்ப கல்லு தான் ஆயுதம்... ஜமீன்தார் ஆட்சி... சென்னை மேயருக்கு கே.என்.நேரு மரியாதை தரவில்லை. சொந்த கட்சிக்காரரையே கே.என்.நேரு அடித்தார். கே.கே.எஸ்.எஸ்.ஆர். நரிக்குறவர் இனத்தையே அசிங்கப்படுத்தினார். ஓசி பஸ்... என பொன்முடி அசிங்கப்படுத்துகிறார். ஜோக்கர் அரசாங்கம் தான் தற்போது நடந்துகொண்டிருக்கிறது. மக்களை பற்றின கவலை அவர்களுக்கு இல்லை. திமுக ஆட்சி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சட்டம், ஒழுங்கு சீர்க்கெட்டுள்ளது. வேங்கை வயல் சம்பவத்தில் இதுவரை யாரையும் கைது செய்யப்படவில்லை. மு.க.ஸ்டாலினுக்கு நிர்வாக ஆட்சி இல்லை. திமுக பணம் படைத்தவர்களை இடைத்தேர்தலில் இறக்கியுள்ளது. அவர்கள் ஜனநாயகத்தை நம்பவில்லை, பணநாயகத்தை நம்பியுள்ளனர்.


இரட்டை இலை சின்னத்தை முடக்க எந்த கொம்பனாலும் முடக்கமுடியாது. நிச்சயம் இரட்டை இலை சின்னத்தில் நின்று மிகப்பெரிய வெற்றி பெறுவோம். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆசிர்வாதம் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது. அதனால் எந்தவொரு வகையிலும் இடைத்தேர்தலில் தோற்கமாட்டோம், மகத்தான வெற்றி பெறுவோம்.திக்கு தெரியாத காட்டில் சிக்கி தவிப்பது போல் ஓ.பி.எஸ், சசிகலா, தினகரன் இருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் மிடுக்காக சுதந்திரமாக இருந்த காவல்துறை, இன்று கூனி குறுகி நிற்கிறது” எனக் கூறினார்.