×

நில மோசடி புகாரில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி ஜெயக்குமார் மனு

 

நில மோசடி புகாரில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து வழக்கில் செப்டம்பர் 13ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. இதில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம்  மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெயகுமாருக்கு எதிராக மகேஷ் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில்  ஜெயக்குமார், மகள் ஜெயபிரியா மற்றும் அவரது மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது மருமகனின் சகோதரர் மகேஷ் அளித்த பொய் புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு என்றும்,  2016ல் நடந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு 2021ஆம் ஆண்டு தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.2016ஆம் ஆண்டு ஜெயக்குமார் அமைச்சராக இருந்ததால் புகார் அளிக்க இயலவில்லை என்று புகார்தாரர் மகேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை ரத்து செய்யக்கோரி ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பிப்பதற்காக செப்டம்பர் 13ஆம் தேதிக்கு நீதிபதி இளந்திரையன் தள்ளிவைத்துள்ளார்.