×

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை ஆளுநர் ரவி நேரில் பார்க்கவுள்ளதாக தகவல்

 

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் பார்க்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுரை அவனியாபுரம் பகுதியில் ஒவ்வொரு வருடமும் தைத்திருநாள் "தைப்பொங்கல்" அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தொடர்பாக அவனியாபுரம் தென்காள் பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு கமிட்டி இடையே இரண்டு வருடங்களுக்கு மேல் கருத்து வேறுபாடு உள்ளதால் இரண்டு வருடங்களாக ஜல்லிக் கட்டு விழாவை அரசே எடுத்து நடத்தியது.

இந்த ஆண்டு, ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை மாவட்ட நிர்வாகமே ஏற்று நடத்துவதால் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அதன்படி, தை 1ஆம் தேதி, முதல் ஜல்லிக்கட்டு போட்டியாக மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டை ஆளுநர் ரவி நேரில் பார்க்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.