×

அரசின் அனுமதியின்றி சிலைகள் வைக்கக்கூடாது... ஐகோர்ட்  மதுரைக்கிளை அதிரடி..

 

தமிழ்நாட்டில் அரசு அனுமதியின்றி எந்த சிலையையும் வைக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை  உத்தரவிட்டுள்ளது.  

விருதுநகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  மனு ஒன்றை  தாக்கல் செய்திருந்தார்.  அதில்,  விருதுநகர் அம்மாச்சிபுரத்தில் தியாகி இமானுவேல் சேகரனின் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.  அதற்கு  அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று  கோரிக்கை விடுத்து வழக்கு தொடரப்பட்டது.    இந்த வழக்கை விசாரணை செய்த தனி நீதிபதி,  அரசின் அனுமதி இல்லாமல் சிலை வைக்க கூடாது என்றும்,  தற்போது வைக்கப்பட்டுள்ள சிலையை அகற்றி  வேறொரு இடத்தில் பாதுகாப்பாக கைக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.  

அரசு அனுமதி அளித்த பின்னர் மீண்டும்  இந்த சிலையை அங்கே வைத்துக்கொள்ளலாம் என்றும்  நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து  மீண்டும்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாலசுப்பிரமணியன்  மேல்முறையீடு செய்திருந்தார். அதில்,  தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து முறையான அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.  இந்த மனு இன்று மீண்டும்  நீதிபதிகள் மகாதேவன் அடங்கிய அமர்வில்  விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த சிலை என்பது பட்டா இடத்தில் வைக்கப்பட்டிருந்தாலும் முறையான அரசு அனுமதி பெறப்படவில்லை என்று தெரிவித்தார்.  

மேலும்,  குறிப்பிட்ட  அந்த பகுதியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை  இருப்பதாகவும், ஆகையால் அனுமதிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.  இதனையடுத்து  தீர்ப்பளித்த  நீதிபதிகள்,  தமிழ்நாட்டில் அரசு அனுமதியின்றி எந்த சிலையையும் வைக்கக்கூடாது என்றும்,  முறையான அனுமதி பெறும் வரை சிலைகளை திறப்பதோ, மரியாதை செலுத்துவதோ கூடாது என்றும்  தெரிவித்தனர்.  அதனுடன்,  முன்னாள் முதலமைச்சரின் சிலையை வைக்கவே நீதிமன்றம் நேரடி அனுமதி தரவில்லை என்றும், அரசு  அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.