×


திரைப்பட தயாரிப்பாளர்கள் வீடுகளில் 2வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை!!

 

திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன், தயாரிப்பாளர்கள் தாணு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது.

சினிமா பைனான்சியர் அன்பு செழியன் கோபுரம் சினிமாஸ் என்று தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்துள்ளார். அத்துடன் பல்வேறு படங்களுக்கு அவர் பைனான்ஸ் செய்துள்ளார். நேற்று அன்பு செழியனுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மொத்தம் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில் சென்னையில் 10 இடங்களிலும் மதுரையில் 30 இடங்களிலும் தொடர்ந்து சோதனை நடைபெற்றது. அவருக்கு சொந்தமான அலுவலகம், வீடு ,உறவினர், நண்பர்கள்  வீடு என பல இடங்களில் சோதனை நடைபெற்றது.இந்நிலையில் சினிமா பைனான்சியர் அன்புச் செழியனுக்கு சொந்தமான வீடு மற்றும் அவருடைய உறவினர்கள் வீடுகளில் ஐடி ரெய்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 24 மணி நேரத்தை கடந்து விடிய விடிய வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல் தயாரிப்பாளர்கள் தாணு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர். பிரபு மற்றும் ஞானவேல் ராஜா ஆகியோரின் இரு தயாரிப்பு நிறுவனங்களும் தியாகராய நகரில் உள்ள தணிகாசலம் சாலையில் இயங்கி வருகிறது .அங்கும் நேற்று முதல் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் அலுவலகத்திலும்,   பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் பெயரில் படத்தயாரிப்பில் ஈடுபட்டு வரும் தயாரிப்பாளர் லக்ஷ்மன் அலுவலகம் மற்றும் வீடுகளிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.