×

மாற்று மதப் பெண்ணை திருமணம் செய்ததால் ஆணவ படுகொலை!

 

ஐதரபாத்தில் பெரியவர்களின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்ததால் சகோதரியின் கணவர் என்றும் பார்க்காமல் நடுரோட்டில் அனைவரும் பார்த்து கொண்டு இருக்கும் போது இரும்பு ராடால் அடித்து கொலை செய்த பெண்ணின் சகோதரனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் மார்பள்ளியை சேர்ந்த பில்லாராபுரம் நாகராஜு, மார்பள்ளி அருகே உள்ள கானாபூரில் வசிக்கும் சுல்தானா அஷ்ரின் என்பவரை காதலித்து வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணின் உறவினர்கள் நாகராஜை எச்சரித்து காதலை தொடர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தனர். ஆபத்தை உணர்ந்த நாகராஜ் ஐதராபாத்தில் வேலை தேடி  ஒரு நிறுவனத்தில் விற்பனையாளராகச் சேர்ந்தார். பணிக்கு சென்று செட்டில் ஆன பிறகு திருமணம் செய்து கொள்வதாக அஷ்ரீனிடம் கூறினார். அவ்வாறே ஐதராபாத்தில் ஒரு வாடகை வீடு எடுத்து தங்கி வந்தார்.

இந்நிலையில் அஷ்ரின் வீட்டில் சொல்லாமல் ஜனவரி மாதம் ஐதராபாத்தில் நாகராஜ் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.  இருவரும் ஜனவரி 31ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள ஆர்ய சமாஜத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் இருக்கும் இடம் அஷ்ரின் உறவினர்களுக்கு தெரிந்ததால் வேலை மற்றும் குடியிருக்கும் வீட்டை மாற்றினர். எத்தனை இடங்கள் மாறினாலும் அஷ்ரின் மற்றும் நாகராஜின் உறவினர்கள் அவர்களை விடவில்லை. தற்போது சரூர் நகரில் இருப்பதை அறிந்த அஷ்ரின் உறவினர்கள் புதன்கிழமை இரவு அஷ்ரின் - நாகராஜ் வெளியே சென்று கொண்டிருந்த போது அஷ்ரின் சகோதரர் இருவரையும் தாக்கினர்.  அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே நாகராஜை  கொடூரமாக இரும்பு ராடால் அடித்து கொலை செய்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து போலீசார் அஷ்ரினின் சகோதரரை கைது செய்து  வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  என்ன நடந்தது என்று தெரியாமல் அதிர்ச்சியடைந்த அஷ்ரினை நாகராஜின் உறவினர்கள் அவர்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.