×

 சென்னையில்  சூறைக்காற்றுடன் கனமழை - சாலைகளில் வெள்ளம்

 

சென்னையில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.  சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.  இந்த கனமழையினால் சாலைகள் எங்கும் வெள்ளம் ஓடுகிறது.  ஆறுகளாக மாறி காட்சியளிக்கின்றன.  வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருக்கின்றன. சிரமப்பட்டு செல்லும் வாகனங்களும் எங்கு பார்த்தாலும் கும்மிருட்டாக  மாறி இருப்பதால் இரவில் செல்வது போல் வாகனங்களில் லைட் எரியவிட்டுக் கொண்டு செல்கிறார்கள்.

சென்னையில் பட்டினப்பாக்கம், சாந்தோம், சேப்பாக்கம், மெரினா, எம். ஆர். சி. நகர், திருவல்லிக்கேணி , சிந்தாதிரிப் பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.  அதே போல் சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், அண்ணனூர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து வருகிறது .  கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை,  மிக கனமழையும் பெய்து வருகிறது.  இந்த நிலையில்  தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இன்று கனமழை  3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.