×

36வது மெகா தடுப்பூசி முகாமில் 12.62 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன - அமைச்சர் தகவல்

 

தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நேற்று நடைபெற்ற 36வது மெகா தடுப்பூசி முகாமில் 12 லட்சத்து 62 ஆயிரத்து 089 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் படி தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ மனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 50,000 சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இன்று நடைபெற்ற சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட 12,62,089 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 61,202 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 2,98,634 பயனாளிகளுக்கும் மற்றும் 9,02,253 பயனாளிகளுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டோரில் 96.49% முதல் தவணையாகவும் 91.09% இரண்டாம் தவணையாகவும் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற 35 மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் 5 கோடியே 22 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளார்கள். மாநிலத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை முன்னிட்டு நாளை தடுப்பூசி பணிகள் நடைபெறாது. இவ்வாறு  அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.