×

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த தலைமை ஆசிரியர்

 

மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த தலைமை ஆசிரியர்ஓசூர் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே கெம்பகரை மலைக்கிராமத்தில் அரசு ஊராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட நான்கு பேர் பணிபுரிந்து வருகின்றனர், 150 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் மூன்று ஆசிரியர்கள் வியாழக்கிழமை அலுவலக வேலை காரணமாக கிருஷ்ணகிரி சென்றுள்ளனர்

இதற்கிடையில் பள்ளியில் பயின்று வரும் மாணவியிடம் தலைமையாசிரியர் லாரன்ஸ் என்பவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார், இதையடுத்து மாணவி பெற்றோரிடம் தகவல் அளிக்கவே பெற்றோர் தேன்கனிகோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் இதுதொடர்பாக தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டதில் தலைமையாசிரியர் மாணவியிடம் சில்மிஷம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி அவர்களின் உத்தரவின் பேரில் தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் அன்பழகன் விசாரணை நடத்தி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து தேன்கனிக்கோட்டை மகளிர் போலீசார் தலைமையாசிரியர் லாரன்சிடம் விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.