×

மெட்ரோ பணிக்காக கோவில் நிலத்தை தொட்டால் போராட்டம் வெடிக்கும்- எச். ராஜா

 

பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 31 ஏக்கர் நிலத்தை சென்னை மெட்ரோ பணிக்காக தொட்டால் போராட்டம் வெடிக்கும் என பாஜக மூத்த தலைவர் எச் ராஜா தெரிவித்துள்ளார்.

பூந்தமல்லியில் உள்ள அருள்மிகு திருக்கச்சி நம்பி மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று காலை சாமி தரிசனம் செய்தார். பின்னர் இந்த கோயிலுக்கு சொந்தமான நிலத்தை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் எடுத்துள்ளது. அதுகுறித்து இந்து ஆலய மீட்பு இயக்கம் சார்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பேசிய எச்.ராஜா, “நாம ஏதோ கோவிலுக்குப் போறோம், முடிஞ்சா தட்டில் காசு போடுவோம் இல்லை என்றால் பிரசாதமாக வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் நாம போகிற கோவில் ஒழுங்கா பராமரிக்கப்பட வேண்டிய சொத்துக்கள் முறையாக உள்ளதா? என்பதை பார்க்கிறோமா இதற்காக
விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த அமைப்பு. இந்தக் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் ஒரு கோடியைக் கொடுத்து விட்டு பேருந்து நிலையம் அமைத்துள்ளனர். 

கோவிலுக்கு சொந்தமான நிலம் அரசுக்கு சொந்தமான நிலம் என நினைக்கிறார்கள். அப்படி அல்ல தனிநபர்கள் கோவிலுக்காக தங்களது நிலைகளை தானமாக எழுதி கொடுத்துள்ளனர். இந்த கோவிலுக்கு சொந்தமான 31 ஏக்கர் நிலம் மெட்ரோ ரயிலுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 31 ஏக்கர் நிலத்தை தொட்டால் மிக பெரிய போராட்டம் வெடிக்கும். கோயிலுக்கு சொந்தமான நிலங்களை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தொடக்கூடாது. இந்து கோவில்களை அழிப்பதற்கு தமிழக முதல்வரும், அமைச்சர்  சேகர்பாபுவும் சேர்ந்து செய்து வருகிறார்கள். இந்த அரசு இரண்டு விஷயத்தில் வலுவான அறை வாங்கி உள்ளது அயோத்தியா மண்டபத்தை அபகரித்த வழக்கு, பிரவேச பட்டினம் என இரண்டில் அறை வாங்கி உள்ளது.

பாப்பான் சத்திரத்தில் குயின்ஸ்லேண்ட் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலத்தை உடனடியாக மீட்க வேண்டும், அந்த இடத்தில் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அமைய உள்ளதாக போர்டு வைத்துள்ளனர். அது அமைக்க கூடாது. கோயில் நிலங்களில் அரசோ, காவல்துறையோ ஆக்கிரமிப்பு செய்ய முடியாது. இந்து கோவில்கள் அபகரிப்பு என்பதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வரும். தொடர்ந்து பாப்பான் சத்திரம் பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஆய்வு செய்தார்” எனக் கூறினார்.