×

#BREAKING  மீண்டும் பரபரக்கும் குட்கா ஊழல் வழக்கு - விசாரணைக்கு அனுமதி கோரும் சிபிஐ! 

 

குட்கா ஊழல் வழக்கில் விசாரணைக்கு அனுமதிக்க  கோரி தமிழ்நாடு அரசிடம் சிபிஐ கோரிக்கை வைத்துள்ளது. 

கடந்த  2017ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை சென்னையில் விற்பனை செய்ய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள்,  வணிகவரித்துறை அதிகாரிகள் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு லஞ்சம் தரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.  இதை வருமானவரித்துறை அதிகாரிகள் உறுதி செய்த நிலையில் பல இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

இந்நிலையில் குட்கா  ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா ஆகியோரை விசாரிக்க தமிழ்நாடு அரசிடம் சிபிஐ அனுமதி கோரி கடிதம் வழங்கியுள்ளது.  முன்னாள் காவல்துறை அதிகாரிகள் ராஜேந்திரன் ஜார்ஜ் உள்பட 12 பேரை விசாரிக்க சிபிஐ அனுமதி கூறியுள்ளது.தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புக்கு சிபிஐ எழுதியுள்ள கடிதத்தில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் ரமணா, சென்னை காவல் ஆணையராக இருந்து ஓய்வு பெற்ற ராஜேந்திரன் , ஜார்ஜ் உட்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய அனுமதி கோரியுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் , ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய மாநில அரசின் அனுமதி வேண்டும் என்பதன் காரணமாக சிபிஐ தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு தரப்பில் அனுமதி வழங்கப்பட்ட பிறகு முன்னாள் அமைச்சர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.