×

ஆளுநர் தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- அர்ஜூன் சம்பத்

 

தமிழக அரசை டிஸ்மிஸ் செய்வதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் மேற்கொள்ள வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரரான கொடிகாத்த குமரனின் 91 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் குமரன் நினைவகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் . இந்நிகழ்வில் கலந்து கொள்ள வந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் திருப்பூர் குமரன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “திருப்பூரில் கொடிகாத்த குமரன் பெயரை சூட்டாமல் புதிதாக திறக்கப்பட்ட பேருந்து நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். மேலும் தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் அவமரியாதை செய்யப்பட்டிருப்பதன் மூலம் தமிழக சட்டமன்றத்தின்  மாண்பு கெடுக்கப்பட்டிருக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டமே அவமதிப்பு  செய்யப்பட்டு இருக்கிறது. 

திமுக தனது கொள்கைகளை ஆளுநர் உரையில் வாசிப்பதற்காக எழுதிக் கொடுத்ததை ஆளுநர் பதவியின் மாண்பை பாதுகாக்கும் வகையில் ஆளுநர் சில வரிகளை தவிர்த்து இருக்கிறார். ஆளுநரை அவையில் வைத்துக்கொண்டு அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி செய்யப்பட்டு இருப்பதன் காரணமாக அவர் வெளியேறினார். உடனடியாக அரசியலமைப்பு சட்டப்பிரிவு 365 படி தமிழக சட்டமன்றத்தை முடக்கி வைக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி சட்டம் ஒழுங்கு சீர்கேடு , ஆளுநருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல், பிரிவினைவாத ஆதரவு உள்ளிட்ட காரணங்களுக்காக தமிழக அரசை டிஸ்மிஸ் செய்வதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் மேற்கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.