×

தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த கல்லூரிகள் இடம்பெற்றிருப்பது சாதனை-ஆளுநர் ரவி

 

சிறந்த கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலில் நாட்டிலேயே முதல் பத்து இடங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த கல்லூரிகள் இடம்பெற்றுள்ளது மிகப்பெரிய சாதனை என ஆளுநர் ரவி புகழாரம் சூட்டியுள்ளார். 


உயர்கல்வி மேம்பாடு தொடர்பான கருத்தரங்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. சமீபத்தில் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சிறப்பான இடங்களை பெற்றுள்ள கல்வி நிறுவனங்களை சேர்ந்த கல்லூரி முதல்வர்கள் மற்றும் துணை வேந்தர்களை ஆளுநர் கௌரவித்தார். மேலும் தேசிய தர நிர்ணயத்தை பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட உத்திகள், நடைமுறைகள் ஆகியவற்றை அந்த கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் விளக்கப்படமாக விவரிக்கப்பட்டது.  இந்நிகழ்வில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் பொன்முடி, ஆளுநரின் செயலாளர் ஆனந்த்ராவ் படேல், உயர்கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற அனைத்து கல்வி நிறுவனங்களும் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளன. இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் உருவாக்கும் மாநிலம் என்ற நிலையில் தமிழ்நாடு உள்ளது.  கலை அறிவியல் மருத்துவம் என்ற எந்த கல்வியாக இருந்தாலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது என பெருமிதத்துடன் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, இந்தியாவிலேயே உயர்கல்வித் தரத்திலும், சதவீதத்திலும் தமிழ்நாடு முதலாவதாக உள்ளது. உயர்கல்விக்காக முதலமைச்சர் அதிக நிதியினை ஒதுக்கி யுள்ளார். கல்வித் தரத்தை மேலும் உயர்த்த நான் முதல்வன், மாணவிகளுக்கு ஊக்கத்தொகை என பல திட்டங்களை அறிவித்துள்ளார்.  அனைவருக்கும் உயர்ந்த தரமான கல்வி சென்று சேர வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நோக்கம். தரவரிசையில் இடம்பெற்ற 11 கல்லூரிகளில் ஒன்று மட்டுமே அரசுக்கல்லூரி என்பதில் சற்று வருத்தம் தான். அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் போட்டி போட்டு உயர வேண்டும் என தெரிவித்தார். 

பின்னர் நிகழ்ச்சியின் இறுதியில் பேசி ஆளுநர் ரவி, தரவரிசை பட்டியலில் நாட்டிலேயே முதல் பத்து இடங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த கல்லூரிகள் இடம்பெற்றுள்ளது மிகப்பெரிய சாதனை.  தமிழ்நாட்டை சேர்ந்த இதர கல்வி நிறுவனங்களும் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் . கல்வி தரத்தை இன்னும் உயர்த்தி கொள்ள வேண்டும். சிறந்த கல்லூரிகள் தங்களது யுக்திகள், முன்னெடுப்புகள், அனுபவங்களை இதர கல்லூரிகளுடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்றார். மேலும், கல்லூரிகள் தங்களை சுயமதிப்பீடு செய்துக் கொண்டு மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அனைத்து கல்லூரிகளுக்கும் பாராட்டுகள் எனவும் ஆளுநர் ரவி தெரிவித்தார்.