×

பழனி திருக்கோவிலில் குடமுழுக்கு விழா - இன்று முதல் 5 நாட்களுக்கு தங்க தேர் புறப்பாடு ரத்து

 

பழனி திருக்கோவிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு இன்று முதல் 5 நாட்களுக்கு தங்க தேர் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருகிற 27ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.  90க்கும் மேற்பட்ட யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்ட குடமுழுக்கு விழாவுக்கு தயார் செய்யப்பட்டுள்ளது.  அத்துடன் ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வருகிற  26 ஆம் தேதி பாத விநாயகர் கோவில் முதல் படிபாதையில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் குடமுழுக்கு நடைபெற உள்ளது.  குடமுழுக்கு விழாவை முன்னிட்டு இன்று முதல் மலைக் கோயிலில் நடை அடைக்கப்பட்டு மூலவர் சன்னதியில் பணிகள் தொடங்க உள்ளன.  இதனால் குடமுழுக்கு நாள் வரை பக்தர்கள் மூலவரை தரிசிக்க அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல்  இன்று முதல் தங்கத்தேர் புறப்பாடும் ஐந்து நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.  வருகிற 28ஆம் தேதி முதல் வழக்கம் போல தங்கத்தேர் உலா நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ராஜகோபுரம் முதல் தங்க கோபுரம் வரையிலும் மலைக்கோயில் பிரகாரங்களிலும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது . இதனால் மலைக்கோயில் இரவு நேரத்தில் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலி ஜொலிக்கிறது.