×

 தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ. 192 உயர்வு..

 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து, ரூ.37,760-க்கு விற்பனையாகி வருகிறது.  

தங்கம் விலையில்  சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாற்றங்கள் நிகழ்வது வாடிக்கையான ஒன்றுதான். அதற்கேற்ப  கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது.  இந்த நிலையில் இம்மாத  தொடக்கத்தில் மத்திய அரசு, தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதனைத்தொடர்ந்து  தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்து வருகிறது.  இறக்குமதி வரி உயர்த்தப்பட்ட ஒரு வார காலத்தில்  மட்டும், தங்கம் விலை சவரனுக்கு  ரூ. 1000  வரை அதிகரித்தது  குறிப்பிடத்தக்கது.  

 கடந்த சனிக்கிழமை அன்று,  தங்கம் விலை சவரனுக்கு ரூ. 128  அதிகரித்து ஒரு சவரன்  ரூ.37,568-க்கு விற்பனையானது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால்,   தங்கம்  விலையில் மாற்றம் ஏதுமின்றி  விற்பனையானது.  இந்த நிலையில் இன்று  தங்க விலை மேலும்  உயர்வை கண்டிருக்கிறது.  இன்று காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட்  ஆபரணத் தங்கம் சவரனுக்கு  ரூ.192 அதிகரித்திருக்கிறது. அதன்படி  ஆபரணத் தங்கம் சவரனுக்கு  ரூ.37,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  தங்கம் விலை கிராமுக்கு ரூ.24 உயர்ந்து, ரூ.4,720-க்கு விற்பனையாகிறது.   அதேபோல் வெள்ளியின் விலை  10 காசுகள்  குறைந்து  ஒரு கிராம் ரூ.61.10-க்கும், ஒரு கிலோ ரூ.61,100க்கும்  விற்பனை செய்யப்படுகிறது.