×

கோகுல்ராஜ் கொலை வழக்கு- சிசிடிவி காட்சிகள் முறையாக ஆய்வு செய்யப்படவில்லை

 

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலில் பதிவான சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் முறையாக ஆய்வு செய்யவில்லை என கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது. 

சேலம் மாவட்டம் ஓமலூரை  சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தீரன் சின்னமலை, பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேரில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது யுவராஜ் உள்ளிட்ட மேல்முறையீட்டு மனுதாரர்கள் தரப்பிலான வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

அப்போது, திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலில் எட்டு சிசிடிவி கேமராக்கள் உள்ளதாகவும், அதில் இரண்டு சிசிடிவி கேமிராக்களில் பதிவான காட்சிகளை மட்டுமே காவல்துறையினர் ஆய்வு செய்ததாக தெரிவிக்கப்பட்டது.  மேலும், கோகுல்ராஜ் கொலை தொடர்பான வீடியோ குறித்தும் வீடியோ பதிவான மெமரி கார்டு தொடர்பாகவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து வழக்கின் விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.