கீழச்சேரி மாணவி தற்கொலை : விசாரணையை முடுக்கிய தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்..
திருவள்ளூர் கீழச்சேரி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அப்பள்ளியில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் இயங்கி வரும் சாக்ரீட் ஹார்ட் அரசு நிதி உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தவர் சரளா. பள்ளிக்கு சொந்தமான விடுதியிலேயே மாணவி தங்கி படித்து வந்த நிலையில் 25 ஆம் தேதி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின்பேரில் மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், டிஐஜி சத்தியப்பிரியா, எஸ்.பி பெகெர்லா செபாஸ் கல்யாண் ஆகியோர் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், சக மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து சிபிசிஐடி டி.எஸ்.பி செல்வகுமார் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பள்ளி மாணவியின் தற்கொலை தொடர்பாக இன்று (ஜூலை 28) தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்க் கானூங்கோ தலைமையிலான , 7 பேர் கொண்ட குழுவினர் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், எஸ்.பி., பெகெர்லா செபாஸ் கல்யாண், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், சார்பு ஆட்சியர் மகாபாரதி, வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்டோர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். முதலில் அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் பள்ளி நிர்வாகி, ஆசிரியர்கள், விடுதி வார்டன் மற்றும் சக மாணவிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், . தொடர்ந்து மாணவியின் சொந்த ஊரான தெக்கலூர் கிராமத்தில் சென்று மாணவியின் பெற்றோர், உறவினர்களிடம் விசாரணை நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.