×

ஹேமானந்த பிஸ்வால் மறைவு - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!!

 

ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹேமானந்தா பிஸ்வால் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 83. வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிர் பிரிந்தது.

ஹேமானந்தா பிஸ்வால் ஒடிசாவின் முதலமைச்சராக இரண்டு முறை பணியாற்றியுள்ளார்.  அவரது உடல் இன்று காலை புவனேஸ்வர் நயபள்ளியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசு நெறிமுறைகளின்படி இறுதிச்சடங்குகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  "ஒடிசா மாநில முன்னாள் முதல்வர் ஹேமானந்த பிஸ்வால் அவர்கள் மறைந்ததை  அறிந்து வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவரது நண்பர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.