×

மனைவி, மகள்களை கொன்று தந்தை தற்கொலை - மூத்த மகளின் காதல் திருமணத்தால் நேர்ந்த சோகம்!!

 

மனைவி, 2 மகள்களைக் கொன்று  நபர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் நாகையில் அரங்கேறியுள்ளது.

நாகை மாவட்டம், புதுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் லக்ஷ்மணன்.  இவர் தனது மனைவி புவனேஸ்வரி, மகள்கள் வினோதினி (18), அக்சயா (15) ஆகியோரை கொலை செய்துள்ளார். மனைவி  மற்றும் மகள்கள் தூங்கும் போது  தலையில் கல்லை போட்டு கொலை செய்து தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மூத்த மகள் காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில் விரக்தியில் இருந்த லக்ஷ்மணன் தனது குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.

இதுகுறித்த விசாரணையில் , லக்ஷ்மணன் மூத்த மகள் தனலட்சுமி, பெற்றோரின் கடும் எதிர்ப்பை மீறி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அதேபகுதியை சேர்ந்த விமல் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த  லக்ஷ்மணன் கடந்த 4 தினங்களாக டீக்கடையை திறக்காமல் இருந்து வந்துள்ளார்.  4 தினங்களாக  டீக்கடையை திறக்காததால் சந்தேகம் அடைந்த அப்பகுதிவாசிகள் இதுகுறித்து கீழ்வேளூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் லக்ஷ்மணன் தற்கொலை செய்துகொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து இறந்தவர்களின் சடலங்களை மீட்ட போலீசார்,  பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூத்த மகளின் காதல் திருமணத்தால் நாகை புதுச்சேரி கிராமத்தில் நிகழ்ந்துள்ள  இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.