×

தமிழகத்தில் இனி யூக்கலிப்டஸ் மரங்களை நடக் கூடாது- உயர்நீதிமன்றம்

 

தமிழகத்தில் இனி யூக்கலிப்டஸ் மரங்களை நடக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவத்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அறிக்கையாக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 10 ஆண்டுக்குள் தமிழக வனப்பகுதிகளில் உள்ள அனைத்து அன்னிய மரங்களும் அகற்றப்படும் எனவும் இதற்காக  மாவட்ட அளவிலான குழுக்கள் அமைத்துள்ளதாக விளக்கம்  அளிக்கப்பட்டது. மரங்களை அகற்றும் பணிக்கான நிதியை  'ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர்' மற்றும் கிராமப்புற வளர்ச்சி மற்றும் விவசாயத்துக்கான தேசிய வங்கி' ஆகியோரிடம் பெற உள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த  நீதிபதிகள், வனங்களை காப்பது தொடர்பாக அறிக்கைகளை மட்டுமே தாக்கல் செய்யும் தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை என அதிருப்தி தெரிவித்தனர். மேலும், இதற்காக பத்து ஆண்டுகள் காத்திருக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், அன்னிய மரங்களை அகற்றும் பணியை தனியாரிடம் ஒப்படைத்தால் பணிகள் விரைந்து முடியும் எனவும் அறிவுறுத்தினர்.

மேலும், அன்னிய மரங்களை அகற்ற கொள்கை முடிவெடுத்து தமிழக அரசே, யூக்கலிப்டஸ் மரங்களை  நடுகிறது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இனி தமிழகத்தில் யூக்கலிப்டஸ் மரங்களை அரசு நடக்கூடாது என உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.