×

இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையத்தின் முழு கட்டுப்பாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி

 

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார். திருமகன் ஈவேராவின் மறைவால் ஈரோட் கிழக்கு சட்டமன்ற தொகுதி தற்போது காலியாகியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறையின் படி, காலியிடம் ஏற்பட்ட சட்டமன்ற தொகுதியில் 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தி புதிய சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும். இதனையடுத்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. 

இந்நிலையில், நேற்று திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா ஆகிய 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணையை  இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துது. அப்போது ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 02ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் உள்ளனர். ஈரோடு நகராட்சி ஆணையர் சிவகுமார், தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு கூறியுள்ளார். 

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி, அந்த மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை அரசு வெளியிட முடியாது. அங்கு பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். பொருட்கள், பணம் கொண்டு செல்லும் போது பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்படும். அதற்கான சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.