தாய்மொழியில் கல்வி கற்பது தான் சிறந்தது - ஆளுநர் ஆர்.எம்.ரவி பேச்சு..
தாய் மொழியில் கல்வி கற்பது தான் சிறந்தது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் நென்மேலி பகுதியில் தமிழ்நாடு வித்யா பாரதி அமைப்பு சார்பில் தேசிய கல்விக் கொள்கை-2020 செயல்படுத்துதல் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் 48 தனியார் பள்ளிகளை சேர்ந்த தாளாளர்கள், முதல்வர்கள், ஆசிரியர்கள் உட்பட சுமார் 1, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தேசிய கல்விக் கொள்கை குறித்து பல்வேறு தலைப்புகளின் கீழ் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை விருந்தினராக பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இதுவரை இந்திய நாட்டில் 60 மற்றும் 80-களில் இரண்டு முறை கல்விக் கொள்கைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இப்போது மூன்றாவது முறையாக கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஆனால் தேசிய அளவில் தற்போது கொண்டுவரப்பட உள்ள கல்வி கொள்கையானது, முதல் கல்விக் கொள்கை என்று சொல்லலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், “தேசிய அளவில் தற்போது ஏன் கல்விக் கொள்கை புதிதாக தேவை என்றால், சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆகிறது. உலக மக்கள் தொகையில் தற்போது இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியா விரைவில் முதல் இடத்திற்கும் வரலாம். வறுமை குறித்த சற்று பின் தங்கியுள்ளோம். இந்தியா பொருளாதார ரீதியில் வேகமாக வளரும் நாடாக இருந்து வருகிறது. நாட்டை கட்டமைக்க வேண்டியது இன்றியமையதாக உள்ளது. பிரிட்டிஷ் அரசு நம்மை ஆட்சி செய்த பொழுது, நம்முடைய கல்வி முறையை அழித்து விட்டார்கள்.
தற்பொழுது இந்தியாவில் தாய் மொழி வழி கல்வி இல்லை. நாம் அனைத்தையும் ஆங்கிலத்தில் கற்றுக் கொண்டு வருகிறோம். பிறமொழி கற்றுக் கொள்வது நல்லது தான். ஆங்கிலத்தில் படித்தால் தான் பெரியது என்று கிடையாது. பிரான்ஸ், சைனா, ரஷ்யா ,ஜெர்மனி போன்ற நாடுகளில் அவரவர் மொழிகளிலே படித்து வருகின்றனர். அறிவியல் பாடத்தை கூட அவர்கள் மொழியிலே கற்றுக் கொள்கின்றனர். அவரவர் தாய்மொழியில் படிப்பது நல்லது என பேசினார். ஏன் அது இந்தியாவில் முடியாது, இந்தியாவின் அறிவு களஞ்சியத்தை மீட்டெடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.