×

ஒரு அரசு எப்படி செயல்படக் கூடாது என்பதற்கு திமுக அரசு சான்று - எடப்பாடி பழனிசாமி பேச்சு

 

ஒரு அரசு எப்படி செயல்படக் கூடாது என்பதற்கு திமுக அரசின் 18 மாத கால ஆட்சி சான்று என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

கோவை மாவட்டத்தை தமிழக அரசு புறக்கணிப்பதை கண்டித்தும், சொத்து வரி, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை திரும்ப பெற வலியுறுத்தியும் கோவையில் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர். 

இதில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி தமிழகத்தின் பொற்கால ஆட்சியாக இருந்தது. விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியது அதிமுக அரசு. கோவைக்கு மட்டும் அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கோவைக்கு மட்டும் 28 தடுப்பணைகள் அதிமுக ஆட்சியில் கட்டுக்கொடுக்கப்பட்டுள்ளன. மக்கள் நலன் கருதி அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக அரசு ரிப்பன் வெட்டி உரிமை கொண்டாடுகிறது. அதிமுக கொண்ட வந்த கோவை மெட்ரோ ரெயில் திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டது. திமுக ஆட்சியில் கோவைக்கு மட்டுமில்லை தமிழகத்திற்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்கவில்லை. 18 மாத திமுக ஆட்சியில் தமிழக மக்கள் வேதனையில் உள்ளனர். அதிமுக கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக திமுக அரசு கைவிடுகிறது. ஒரு அரசு எப்படி செயல்படக் கூடாது என்பதற்கு திமுக அரசின் 18 மாத கால ஆட்சி சான்று. இவ்வாறு கூறினார்.