×

பிரதமர் மோடியை நாட்டை விட்டு ஓட வைக்க வேண்டும்- ஈவிகேஎஸ் இளங்கோவன்

 


ஈரோடு கிழக்கு சட்டமன்றத் இடைத்தேர்தலில் பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட தைரியம் இருக்கின்றதா? தனியாக கூட வேண்டாம் அதிமுக கூட்டணியிலேயே நின்று காட்ட முடியுமா? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சவால் விடுத்துள்ளார்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் தொடர்ச்சியாக அரசியலமைப்பை பாதுகாப்போம்-கையோடு கைகோர்ப்போம் என்னும் மாபெரும் பிரச்சார இயக்கத்த்தை முன்னெடுப்பது தொடர்பான மண்டல ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியில்  உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை,வேலுர்,சேலம் மாவட்டகளுக்கான மண்டல கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் செங்கம் குமார் ஏற்பாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில்  அரசியலமைப்பை பாதுகாப்போம் கையோடு கைகோர்ப்போம் பிரச்சார இயக்கத்தின் தமிழக பொறுப்பாளர் கொடிக்குனில் சுரேஷ்,அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி  செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்லகுமார், மாநிலத் தலைவர் கே. எஸ். அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன், உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு முன்னதாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ. வி.கே. எஸ் இளங்கோவன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.


தொடர்ந்து பேசிய ஈ.வி.கே. எஸ். இளங்கோவன், “நான் தேர்தலில் நிற்க வேண்டாம் என்று நினைத்தாலும் காங்கிரஸ் மேலிடம் சொல்லும் போது என்னால் நிற்காமல் இருக்க முடியாது. என்னை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக  இருமுறையும் மத்திய அமைச்சராக ஒரு முறையும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆக்கியவர் அன்னை சோனியா காந்தி தான், அன்னை சோனியா காந்தியும்,இளம் தலைவர் ராகுல் காந்தியும் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கேவும் தமிழக தலைவர் அழகிரியும் நான் தான் நிற்க வேண்டும் என வலியுறுத்தியதால் இத்தேர்தலில் போட்டியிடுகின்றேன்.

திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி சார்பில் போட்டியிடும் நான் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மிகப்பெரிய வெற்றி அடைவேன். இந்திய ஒற்றுமை நடைப்பயணம்  சென்று கொண்டிருக்கும் ராகுல் காந்தி, சாதாரண விஷயத்தை செய்யவில்லை. மிகப்பெரிய விஷயத்தை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கின்றார். ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடந்து சென்று கொண்டிருப்பது மகத்தான சாதனை மட்டுமல்ல, மகத்தான தியாகத்தையும் செய்து கொண்டிருக்கின்றார். பாஜகவிற்கு மிகப்பெரிய தோல்வியை கொடுக்க வேண்டும். பிரதமர் மோடியை நாட்டை விட்டு ஓட வைக்க வேண்டிய அளவில் இந்த நடைபயனத்தின்  வெற்றியை  காட்ட வேண்டும்.

மக்கள் காங்கிரஸ் கட்சியின் பக்கம் மீண்டும் திரும்பி இருக்கின்றார்கள் என்றால் அதற்கு காரணம் ராகுல் காந்தியின் நடைபயணம் தான். இந்த பயணத்தின் வெற்றியை நாம் தமிழக மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நமது கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்று இளம் தலைவர் ராகுல் காந்தியை  நாட்டின்  பிரதமராகக்க வேண்டும்” எனக் கூறினார்.