×

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமையும் என்ற அண்ணாமலை கனவு பலிக்காது- துரைவைகோ

 

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வைகோவின் மாமனிதன் ஆவணப்பட வெளியீட்டு விழா  நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த மதிமுகவின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மதத்தை வைத்து மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தி வளர முயற்சிக்கிறது. கவர்னர் மக்களுக்காக செயல்படவில்லை. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 20 தீர்மானங்களுக்கு  ஒப்புதல் வழங்காமல் மத்திய அரசின் ஊது குழலாக செயல்பட்டு வருகிறார். வரும் பாராளுமன்றத் தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகளுடன் மதிமுகவின் கூட்டணியும் தொடரும். தமிழகத்தில் பாஜகவின் வன்முறை கலாச்சாரம் வேறு ஒன்றி விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரிசி, பருப்பு கொள்முதல் செய்ததில் 100 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக கூறி வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இதை மட்டும் வைத்து குற்றம் நடந்ததாக கூறிவிட முடியாது. இது பற்றி விசாரணை முடிந்த பின்னர் தான் பதில் சொல்ல முடியும்.மதிமுக பூரண மதுவிலக்கு கொள்கையிலிருந்து ஒரு போதும் பின்வாங்க போவதில்லை. தமிழக முதல்வரின் முயற்சியால் தமிழகத்தில் தொழிற்சாலைகள் பெருகி வருகின்றன, புயல், மழை காலங்களில் பாதிக்கப்பட்ட நாலு லட்சம் மக்களுக்கு உடனடியாக தங்குமிடம் நிவாரணம் போன்றவை அளித்தது பாராட்டக்கூடியது. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமையும் என அண்ணாமலை கனவு காண்கிறார். ஆனால் அவரது கனவு ஒருபோதும்பலிக்காது” எனக் கூறினார்.