×

பணத்தை மட்டுமே செலவு செய்தீர்கள்; உருப்புடியா ஒன்னும் பண்ணல- ஈபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி

 

அத்திக்கடவு அவினாசி திட்டம் தாமதமாக நடப்பதாக எதிர்க்கட்சிதலைவர் கூறியுள்ளார், அத்திக்கடவு அவினாசி திட்டம் சரபங்கா திட்டத்தில்  கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் ஒரு இடத்திலாவது தண்ணீர் கொடுத்தார்களா? பெயருக்கு பணத்தை செலவு செய்தனர் ஆனால் அதிமுக ஆட்சியில் நில ஆர்ஜிதம் செய்யவில்லை என தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விண்ணம்பள்ளி,வள்ளிமலை,பொன்னை ஆகிய அரசு பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவானது மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “பொன்னை அரசு ஆரம்பசுகாதார நிலையம் தூய்மையற்ற நிலையில் இருக்கிறது. மருத்துவர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. புகார்களும் பலமுறை வந்தது, நானும் எச்சரித்தேன். நான் யாரையும் அதிகாரிகளையும் பழிவாங்குவது கிடையாது. ஆனால் இப்பிரச்சனையால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே மருத்துவர்கள் இனியும் சரியாக நடக்கவில்லை என்றால் நான் சுகாதாரத்துறை அமைச்சரிடம் பேசி அவர்களை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க நடவடிக்கை எடுப்பேன். மருத்துவர்கள் பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் விளங்காமல் செய்ய பாடுபடுகின்றனர். இதனை அவர்கள் மாற்றிகொள்ள வேண்டும். 

அத்திக்கடவு அவினாசி திட்டம் தாமதமாக நடப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் கூறியுள்ளார் அவருக்கு நான் தெரிவிக்கிறேன் சரபங்கா திட்டமானாலும் அத்திகடவு அவினாசி திட்டமானலும் எங்காவது ஒரு இடத்திலாவது நீரை கொடுத்தாரா? பெயருக்கு பணத்தை செலவு செய்தனர். ஆனால் உருப்படியான காரியத்தை செய்யவில்லை. அதே போல் அதிமுக ஆட்சியில் அவர்கள் இந்த திட்டங்களுக்காக நில ஆர்ஜிதமே செய்யவில்லை” எனக் கூறினார்.