×

சென்னையில் உதயமாகிறது முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி சாலை!

 

சென்னை முதல் மாமல்புரம் வரையிலான கிழக்குக் கடற்கரைச்சாலைக்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி சாலை என்று பெயர் சூட்டப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலைத் துறையின் பவள விழாவை முன்னிட்டு சென்னை கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் பவளவிழா நினைவுத் தூணை திறந்து வைத்த  முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் பல்வேறு மேம்பாலப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.   மேலும் சென்னையில் ஆழ்வார்பேட்டை ,  தேனாம்பேட்டை பகுதியை அண்ணா சாலையில் இணைக்கும் எல்டாம்ஸ் சாலை சந்திப்பு , பாண்டிபஜார் சாலை ,  செனடாப் சாலை சந்திப்பு , நந்தனம் சந்திப்பு , சிஐடி நகர் 3வது மற்றும் முதல் பிரதான சாலை சந்திப்பு , சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலை சந்திப்பில் 4 வழித்தடங்களில் 485 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள மேம்பாலங்களின் கிராபிக்ஸ் காணொலிகள் ஒளிபரப்பபட்டன.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அடிக்கல் நாட்டப்பட்ட மேம்பாலப் பணிகள் 2 ஆண்டில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். சாலை சரியில்லை என்றால் வாகனத்தில் செல்வோர் முதலில் திட்டுவது அரசாங்கத்தைத்தான். அரசுக்கு  நல்ல பெயரும் , அவப் பெயரும் நெடுஞ்சாலைத்துறை மூலமே  கிடைக்கும். தமிழ்நாடு இந்தளவிற்கு வளர்ச்சி பெற நெடுஞ்சாலைத்துறையே காரணம் . உலகத் தரம் வாய்ந்ததாக கிண்டி நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலையம் மாற வேண்டும். முதலமைச்சரானவுடன் 5 சாலைகளின் நெரிசலை குறைக்கும் விதமாக அண்ணா மேம்பாலத்தை கட்டினார் கருணாநிதி. 

நெல்லை ஈரடுக்கு மேம்பாலம் இந்தியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலம் , கிராமங்களை நகரங்களுடன் இணைக்க கிராமப்புற சாலைகள் மற்றும் இணைப்புச் சாலைகளை கருணாநிதி உருவாக்கினார் . தமிழகத்தில் 1000க்கும் மேல் மக்கள் தொகை கொண்ட அனைத்து கிராமங்களிலும் இணைப்புச் சாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சாலை போடுவதற்கு நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் இருப்பதால் , திட்டத்தை நிறைவேற்றி  மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு செல்வதில் தாமதம் , சுணங்கம் ஏற்படாமல் இருக்கிறது. இதை சரிசெய்ய  184 பணி இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சாலைப் பாதுகாப்பு திட்டம் சிறப்பாக இருப்பதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

சென்னையில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டம் மூலம் மாவட்ட தலைமை மற்றும்  வட்டத்  தலைமையிடங்களை இணைக்கும் விதமாக  2200 கி.மீ தூரத்திற்கு மாநில நெடுஞ்சாலையில் 10 ஆண்டில், போக்குவரத்துச் செறிவைப் பொருத்து 4 வழிச் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. 1281 தரைப்பாலங்கள் 2400 கோடிக்கு மேல் செலவிடப்பட்டு உயர்மட்ட பாலங்களாக மாற்றப்பட உள்ளன. முதல் கட்டமாக  640 தரைப்பாலங்கள் 610 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலங்களாக மாற்றப்பட உள்ளன. இரண்டாம் கட்டமாக 430 தரைப்பாலங்கள்  1100 கோடிக்கு மேல் செலவில் உயர்மட்ட பாலங்களாக மாற்றப்பட உள்ளன. 2026 க்குள் தரைப்பாலங்களே இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாகும். சென்னையிலிருந்து  மாமல்புரம் வரையிலான கிழக்குக் கடற்கரைச் சாலை ' முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி சாலை ' என பெயர் மாற்றப்பட உள்ளது” என தெரிவித்தார்.