‘’எங்களை தலையில் தூக்கி வச்சு கொண்டாடாதீங்க..’’
எங்களுக்கு சோறு போடுங்க தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீங்க என்று துணிவு-வாரிசு பட விவகாரத்தில் ரசிகர் ஒருவர் உயிரிழந்த நிலையில் நடிகர் சத்யராஜ் முன்பு பேசிய பரபரப்பு வீடியோ ஒன்று வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அஜித் நடித்த துணிவு படமும் விஜய் நடித்த வாரிசு படமும் ஒரே நாளில் திரைக்கு வந்திருக்கிறது. ஒரே நாளில் இரு முன்னணி நடிகர்களின் படம் திரைக்கு வருவதால் ரசிகர்கள் மோதல் ஏற்படும் என்று பலரும் அச்சப்பட்டனர். அதே மாதிரி பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன . இந்த கொண்டாட்டத்தின் போது அஜித் ரசிகரான 19 வயது இளைஞர் சென்னையில் உயிரிழந்துள்ளார்.
ஒரு ரசிகர் உயிரிழந்துள்ள நிலையில் கூட சம்பந்தப்பட்ட நடிகரோ அல்லது திரை உலகை சேர்ந்த மூத்த கலைஞர்கள் இதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. அரசும் இதை கண்டுகொள்ளவில்லை. இனி இப்படி நள்ளிரவு காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் உரத்த குரல் இங்கே இல்லை . அரசும் இதை கண்டு கொள்ளாமல் இருக்கிறது.
துணிவு, வாரிசு படத்தில் படங்களுக்கு ரசிகர்களே இருந்த எதிர்பார்ப்பையும் ஊடகங்கள் இடையே வந்த விளம்பரத்தையும் பார்த்து பிரமித்து போல துணிவு இயக்குனர் வினோத் இந்த அளவுக்கு எதிர்பார்ப்பு தேவை இல்லை. ரசிகர்களும் இந்த அளவுக்கு எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. படம் ரிலீஸ் ஆகும் மூன்று நாளைக்கு முன்பு எந்த படத்துக்கு போகலாம் என்று முடிவெடுத்து போவதுதான் சரியானது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் ரசிகர்களுக்கு முன்பு ஒரு முறை அறிவுரை கூறியிருந்த வீடியோ ஒன்று தக்க சமயத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு நடிகருக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்காதீங்க . நடிக்கத் தான் தெரியும். சமூகத்தில் இருக்கிற மிகப்பெரிய தப்பு நடிகர்களை ஐன்ஸ்டீன் அளவுக்கு நினைத்துக் கொள்வது தான். எங்களுக்கு நடிப்பு சார்ந்து மட்டும்தான் தெரியும். இது சும்மா நடிப்பு. ஏன் எங்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுறீங்க. ஊடகங்கள் மீது எனக்கு பெரிய வருத்தம் என்ன தெரியுமா.. எங்களுக்கு சோறு போடுங்க. தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீங்க. எங்களை பெரியார் மார்க்ஸ் என்று நினைத்துக்கொண்டு இருக்காதீங்க என்று கூறி இருக்கிறார்.