×

அரசியல் செய்வது என்பதெல்லாம் ஆளுநரின் பதவிக்கு அழகல்ல - மநீம கண்டனம்!!

 

"அரசியல்சாசனம் வழங்காத" பல்கலைக்கழக வேந்தர் என்ற பதவியின் மூலம் அரசியல் செய்வது என்பதெல்லாம் ஆளுநரின் பதவிக்கு அழகல்ல என்று மநீம தெரிவித்துள்ளது.

கடந்த அக் -17 ஆம் தேதி சென்னையில் மாணவர் விடுதியொன்றைத் திறந்து வைத்துப் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி,  தமிழ்நாட்டில் உள்ள பட்டியல் சமூகத்தவரை ‘ஹரிஜன்’ எனக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். இதற்கு திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.



இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாஜகவை எதிர்க்கும் கட்சியானது ஆளும் கட்சியாகவுள்ள மாநிலங்களில் ஆளுநர்கள் தங்கள் அதிகார எல்லையைத் தாண்டி எதிர்க்கட்சித் தலைவர் போல் செயல்படுவதாகவே ஐயம் எழுகிறது. கேரள ஆளுநரின் நடவடிக்கைகள் இதற்கு நல்ல உதாரணம். தமிழகத்திலும் இதே போக்குதான் நிலவுகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. மாநில சுயாட்சியை கேள்விக்குறியாக்குகிறது.  சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல்தர இழுத்தடிப்பது; "அரசியல்சாசனம் வழங்காத" பல்கலைக்கழக வேந்தர் என்ற பதவியின் மூலம் அரசியல் செய்வது என்பதெல்லாம் ஆளுநரின் பதவிக்கு அழகல்ல." என்று பதிவிட்டுள்ளார்.