×

தண்டோரா முறை  :  தமிழக அரசின் அறிவிப்புக்கு கி. வீரமணி வரவேற்பு.. 

 

 தமிழகத்தில் தண்டோரா போட தடை விதிக்கப்பட்டதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற்பு தெரிவித்துள்ளார்.  

அறிவியல்  மற்றும்  தொழில்நுட்பம்  வளர்ச்சியடைந்துவிட்ட இந்தச் சூழலில் தண்டோரா போடுவது,  இன்னும் தொடர வேண்டியத் தேவையில்லை என்றும்,  ஒளிபெருக்கிகளை வாகனங்களில் பொருத்தி வலம் வரச் செய்வதன் மூலம், மூலை முடுக்குகளில் எல்லாம் தகவல்களைக் கொண்டு சேர்த்திட இயலும் என்றும்  தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.  மேலும்,  தண்டோரா போடக்  கடுமையாக தடை விதிப்பதாகவும்,  மீறி ஈடுபடுத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது.  இந்நிலையில் தமிழக  அரசின் இந்த அறிவிப்பிற்கு திராவிடர் கழகத் தலைவர்  கி.வீரமணி தெரிவித்துள்ளார்.    

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “அரசின் பல்வேறு துறைகள் சார்பான அறிவிப்புகளுக்குத் தண்டோரா போடுவது கடுமையாகத் தடை செய்யப்பட வேண்டும் என்றும், மீறி ஈடுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது  மிக முக்கியமானதும், வரவேற்கத்தக்கதுமாகும். எத்தனையோ அறிவியல் முறைகள் வந்தபின்னும், தண்டோரா போடுவது அவசியமற்றது என்பதைவிட, ஜாதியைக் காக்கும் நடவடிக்கையாகும். அதனைத் தடைசெய்து தலைமைச் செயலாளர் எழுதியுள்ள கடிதம் ஜாதிக்கும், சனாதனத்திற்கும் சம்மட்டி அடி! முற்போக்குத் திசையில் தமிழ்நாடு  'திராவிட மாடல்' அரசு வெல்லட்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.