×

தேவர் சிலைக்கு திமுக மூத்த அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை.. 

 

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவையொட்டி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுக மூத்த அமைச்சர்கள் துரைமுருகன்  பெரியசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி விழா மற்றும் 60 ஆவது குருபூஜை விழா இன்று  நடைபெறுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நிகழ்ச்சிகள் துவங்கின.  இந்நிலையில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பிரம்மாண்ட முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, அன்பில் மகேஷ், ராஜ கண்ணப்பன், தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும்  மாலையணிவித்தும், தேவரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

பின்னர் மதுரை தெப்பக்குளம் சந்திப்பில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் பசும்பொன் கிராமத்திற்கு சென்றார். கோரிப்பாளையம் மற்றும் தெப்பக்குளம் பகுதிகளில் திமுகவினர்  ஏராளமானோர் திமுக மூத்த அமைச்சர்களுக்கு வரவேற்பு அளித்தனர். பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு அஞ்சலி செலுத்திய பின் தி.மு.க பொது செயலாளர் துறைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது, “பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முன்பு கலைஞர் மரியாதை செலுத்தினார். பின்பு ஸ்டாலின் மரியாதை செய்தார் இன்று உடல்நிலை  காரணமாக வர இயலவில்லை, அரசின் சார்பில் மூத்த அமைச்சர்கள் சார்பில் மரியாதை செலுத்தினோம்.  அப்போது "மண்ணுக்குள் மாணிக்கம்" என்று அண்ணா சொன்னதைப்போல பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர் முத்துராமலிங்க தேவர்.  அவர் சொன்னதைப் போல இன்று பல மாணிக்கங்கள் அரசியலிலும் வாழ்விலும் ஜொலித்து வருகின்றனர்” என்றார்..