×

வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்ட திமுக - டிடிவி தினகரன் சாடல்.. 

 

 மருத்துவத்துறை அமைச்சர் கடந்த ஜூலை மாதம் வெளியிட்ட அறிவிப்புக்கு இதுவரை அரசாணை வெளியிடப்படவில்லை என  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

நூற்றுக்கணக்கானோர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவராக சேர காத்திருக்கும் நிலையில் அவர்களுக்கு இதுவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறியிருக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிடிவி தினகரன், “ஆட்சியைப் பிடிப்பதற்காக திரு.ஸ்டாலின் அவர்கள் தேர்தலுக்கு முன் அள்ளிவிட்ட வாக்குறுதிகள் ஏராளம். அவற்றில் பலவற்றை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வரிசையில் வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு இந்தியாவில் சேவை செய்வதற்கான FMG தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்ற நூற்றுக்கணக்கானோர் அரசு மருத்துவக்கல்லூரிகளில் பயிற்சி மருத்துவராக சேர்வதற்கான வாய்ப்பு இதுவரை வழங்கப்படவில்லை.   இதுதொடர்பாக கடந்த ஜுலை மாதம் மருத்துவத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புக்கு இதுவரை அரசாணை வெளியிடப்படவில்லை. எத்தனையோ வாக்குறுதிகளைப் போல தி.மு.க.வினர் இதனையும் காற்றில் பறக்கவிட்டுவிடுவார்களோ?!” என்று குறிப்பிட்டுள்ளார்.