×

இந்தி பிரச்சார சபா நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு

 

நிதி முறைகேடு புகாரில் தக்‌ஷிண பாரத் ஹிந்தி பிரச்சார சபா முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு பதிந்துள்ளது. 

ஒன்றிய அரசு அளித்த ரூ.5.78 கோடி நிதியை இந்தியை வளர்க்க பயன்படுத்தாமல் முறைகேடு செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான நிதி முறைகேடு தொடர்பான புகாரில் மதுரையில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் சிபிஐ அறிக்கையின் அடிப்படையில் தக்‌ஷிண பாரத் ஹிந்து பிரச்சார சபா முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 2004-2005 நிதியாண்டு முதல் 2016-2017 வரையிலான காலத்தில் வழங்கப்பட்ட நிதியில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒன்றிய அரசு வழங்கிய நிதியை இந்தியை வளர்க்க பயன்படுத்தாமல் ஆங்கில வழிக் கல்வி உள்ளிட்டற்றுக்கு முறைகேடாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் அனுமதியின்றி கல்வி நிறுவனங்களை அமைத்து இந்தி தவிர மற்ற படிப்புக்கு நிதியை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.

தென்னிந்திய இந்தி பிரச்சார சபை என்ற கல்வி அமைப்பு, இந்தி பேசாதா தென்னிந்திய மக்களுடைய இந்தி மொழிக் கல்வியறிவை மேம்படுத்தும் பணியை மேற்கொண்டுவருகிறது. இதன் தலைமையகமானது சென்னை, தி.நகர், தாணிகாச்சலம் சாலையில் அமைந்துள்ளது. இந்த அமைப்பை மகாத்மா காந்தி நிறுவினார். அவர் சபையின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். அவர் இறக்கும் வரை அந்தப் பதவியில் இருந்தார். 1964 ஆம் ஆண்டில், இந்த நிறுவனம் இந்திய அரசாங்கத்தால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.