×

இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ. 1 லட்சம்  அபராதம் ?? - வழக்கை ஏற்றது சென்னை உயர்நீதிமன்றம்.. 

 


  இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ. 1 லட்சம்  அபராதம் விதித்த உத்தரவை எதிர்த்து , அரசு தொடர்ந்த  மேல் முறையீட்டு வழக்கை  திங்கட்கிழமை விசாரிப்பதாகச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை  சூளையைச் சேர்ந்த  சுகுமார் என்கிற நபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.  அதில்,  சென்னை சூளையில் அமைந்துள்ள அருள்மிகு சொக்கவேல் சுப்பிரமணியர் திருக்கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களைக் குத்தகைக்கு எடுத்த தனி நபர்கள், நீண்ட காலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.  முன்னதாக  இந்த வழக்கு விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட  தனிநபருக்கு எதிராக  நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறநிலையத்துறை தரப்பில்  கூறப்பட்டது.  இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி,  நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு கடந்த ஆண்டு ( 2021) ஜூன் மாதம் உத்தரவிட்டார்.  
 
 பின்னர்  நீதிமன்றத்தின் உத்தரவை, அறநிலையத்துறை அமல்படுத்தவில்லை என்று  சுகுமார், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.   இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த்,   உதவி ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவதற்கு ஏற்பட்ட கால தாமதத்திற்கான  காரணத்தை குறிப்பிடவில்லை என்றும்,  இதற்கு உதவி ஆணையர்  வருத்தம் தெரிவிக்காததை  ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.  மேலும்,  இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு  ரூ. லட்சமும்,  உதவி  மற்றும் இணை ஆணையர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு  மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளது.  இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசுத் தரப்பில்  கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் கேட்டுக்கொண்டார். இந்த வழக்கினை நீதிபதிகள் வைத்தியநாதன்  மற்றும் ஜெகதீஷ் சந்திரா அமர்வு , திங்கள் கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக  தெரிவித்துள்ளனர்.