"மதுவில் விஷம் கலந்து குடித்து மாணவியின் தந்தை தற்கொலை" - போலீசாரின் அதிர்ச்சி தகவல்!!
சென்னையில் கல்லூரி மாணவி சத்யா இறந்த சோகத்தில் அவரது தந்தை மாணிக்கம் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததுள்ளது.
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சத்யா என்ற இளம்பெண் கல்லூரிக்கு செல்வதற்காக நேற்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது சத்யாவை ஒருதலையாக காதலித்த சதீஷ் என்ற இளைஞர் அவரை பின்தொடர்ந்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து சத்யாவை தன்னை காதலிக்குமாறு அவர் வற்புறுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர் சத்யாவை மின்சார ரயில் வந்து கொண்டிருந்தபோது தள்ளிவிட்டுள்ளார். இதில் சத்யா தலை நசங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைக்கு காரணமான இளைஞரை போலீசார் தனிப்படை அமைத்து தேடிய நிலையில் நேற்றிரவு துரைப்பாக்கம் பகுதியில் கைது செய்யப்பட்டார்.
இந்த சூழலில் மகள் சத்யா கொடூரமாக கொல்லப்பட்ட சோகத்தில் இருந்த அவரது தந்தை மாணிக்கம் திடீர் நெஞ்சு வலி காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்ததாக தகவல் வெளியானது . இதன் காரணமாக மாணவி சத்யா மற்றும் அவரின் தந்தை உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை பரங்கிமலையில் ஓடும் ரயில் தள்ளி கொல்லப்பட்ட மாணவியின், தந்தை மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. விஷம் கலந்த மதுவைக் குடித்ததால் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு, அதனால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது உயிரிழந்துள்ளார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.